Thursday 24 October 2013

வாழ்த்துக் கவிதை!- கவிஞர் கணக்காயன்!

பொன்னேரி நூலகத்தே "ஆசிரியத் தொண்டு அறத் தொண்டு" என்று சொற்பொழிவாற்றிய தமிழாசிரியை இரா.குழலி இரத்தினம் M.A., B.Ed., திறன் போற்றிப் பாராட்டிய வாழ்த்துக் கவிதை!
------------------- ***********---------------****************----------***********************

பொன்னேரி         நூலகத்தே           ஒண்தமிழில்          நின்பொழிவு
மன்றிருந்து         கேட்டவர்கள்       மாமகிழ்வு              கொண்டுனது
மன்னியசீர்         சான்றாண்மை   மண்டியநல்             நாவன்மை
நன்றென்று         பாராட்டி                நல்கினராம்              நன்றிகளை!

அன்னவர்கள்     பன்முறையும்    நின்வருகை            வேண்டுமென
கன்னல்நேர்        கற்கண்டு             நாப்படையல்          நேர்தொடர
தன்விழைவை  கொண்டிட்டார்  என்றறிந்து              நானுவந்தேன்!
நின் தாயும்           நேர்களிற்றாள்!  இன் தமிழாய்       மன்னுகவே!

தத்துவத்தின்     வித்தகத்தால்     தள்ளரிய                 சான்றாண்மை
சித்தத்தே             நேர்தேக்கி           இன்கல்வி              கற்பித்தே
ஒத்தவரும்         மிக்கவரும்          யாருமின்றி           நாடுயர
உத்தமமாய்       நேர்தலைமை     உற்றவர்போல்    நீடுகவே!

ஆசிரியர்            தொண்டுதனை    நல்லறமாய்         ஏற்றுயரும்
மாசில்சீர்           நல்லெழுத்தும்     மாணார்ந்த           நாநலமும்
காசினியோர்   போற்றிடவே         ஆற்றலது             மிக்குயர்ந்து
நேசிக்கப்           பல்லோரும்           தேயத்தே             ஓங்குகவே!



இன்னணம் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்

                                                                                    தாய்:  அர.வனஜாமணி
                                                                               தந்தை:   இ.சே.இராமன்.
பொன்னேரி-601204
22-10-2013
செவ்வாய்.