Saturday 13 September 2014

தீபாவளித்திருநாளையொட்டி நடத்தப்படும் கவிதைப் போட்டிக்கான ஓவியக்கவிதை!-இ.சே.இராமன்




வாயிற்படியில் பூச்சரத்து மாண்மங்கை!

அட்டிலறைக்  காரிகையாள்  வாயிலிலே      நிற்பதேனோ?
கட்டிவைத்தப்  பூச்சரத்தை    கைத்தலத்தே   ஏந்தலென்னே?
கட்டுடலாள்   பூத்தவள்தான்  என்றுரைக்கும்   நேர்த்தியதோ?
மட்டில்லாக்   காமத்தால்      மாணழிதல்      காட்டினளோ?
வெட்டுகின்ற  கண்ணிரண்டால், காலெழுதும்    பான்மையோ?
மெட்டியதைக் கால்விரலில்,     பூட்டும்நாள்    நேர்விழைவோ?
சட்டெனவே    மார்பசைய,    மங்கலநா(ள்)ண்  வேட்பதுவோ?
தும்பியென,    தேனீபோல்,    ஆடவர்கள்       நண்ணாளே!
காண்வேரில்   தீம்பலவாய்,   பெண்ணவள்தான்  காணுகின்றாள்!
மேளம்கொட்   டும்நாள்,நல்    நாதஸ்வரம்      கேட்கும்நாள்,
ஆளன்காண்    மன்றல்நாள்,   வேட்பதனைச்     சாற்றுவளோ?
தன்றன்னைத்   தாயாக்கும்,    தன்மையரால்     சேய்பயந்து,
நற்கிழவி       என்றமையும்    நாட்டந்தான்     சாற்றினளோ?
விட்டிலென    மாய்த்துவிடும்,   தீத்திறத்தார்     தன்பக்கல்,
நண்ணாத      பாங்கதனால்,     நன்மகிழ்வின்    சீர்முகமோ?
நாட்காட்டி      ஏடழிதல்        போல்,நாள்போம்  பாங்கேனோ?
வாட்டத்தைப்   போக்கிடற்கு,    வல்லாரைக்      காணாவல்
கூடியதால்,    நங்கைதான்      வாயிலுக்கே      வந்தாளோ?
தத்தைபோல்,   பூங்குயிலாய்    கான்மயிலாய்,    மான்விழியாள்,
அன்னம்நேர்    மென்னடையாள்,  ஆரணங்கு      தோன்றுவளே!
வென்றிடுக     நல்லெண்ணம்!     வேட்பான      இல்லமைக!
நன்றான        எல்லாமும்,      நேர்தொடர்க     அன்னவட்கே!
மன்னுலகில்     மாப்புகழால்,     இல்லறத்தே     ஓங்குகவே!
தென்தமிழாய்,    தண்ணிலவாய்,  தென்றலென    நீடுகவே!
-கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

(திரு ரூபன் அவர்கள் நடத்தும் கவிதைப்போட்டிக்கான கவிதை)

"புதியதோர் உலகம் செய்வோம்! "-கவிதைப் போட்டிக்கான இரண்டாவது கவிதை!- கவிஞர் கணக்காயன்(இ.சே.இராமன்)


"புதியதோர் உலகம் செய்வோம்!"

நேற்றிருந்த   தின்றில்லா    நேர்த்தியதே    பாருலகு!
மற்றின்று     உள்ளதுவும்   மாறாதோ       நாளைக்கே!
சற்றிதனைச்   சிந்தித்தால்,   சான்றாண்மை  நற்றுணையாய்
முற்றிலுமே   புதியதோர்    முழுதுலகு      காணோமோ?

இல்லாதார்    இல்லாத       இயல்பினதாய்   மாற்றோமோ?
நல்லுளத்தார்  தம்முடமை    நல்குரவைப்     போக்காதோ?
பல்லறிவுச்    சான்றோர்கள்   பாமரர்க்கே     உணர்த்தோமோ?
மெல்லினத்தார் நாற்குணத்தால் மேதினியில்    உயரோமோ?

தன்காலில்       நிற்கின்ற     தன்மைக்கே    நாமாவோம்!
நன்றாற்றல்     ஒன்றினையே  நாட்கடனாய்  கொண்டிடுவோம்!
பன்மொழிகள்    கற்றாலும்     பற்றாவோம்   தாய்மொழிக்கே
எந்நாடு          சென்றாலும்   ஏந்திடுவோம்   நம்பண்பை!

மேலையர்    தோற்றத்தை    மேவிடாதே     நாமெல்லாம்
பாலையைச்   சோலையாய்   பார்த்திடற்கே   நாமுழைப்போம்!
மாலைகாண்   தண்ணிலவில்  மண்டியுள      தண்ணீரை,
வேலைசூழ்     பாருலகில்,    வேணுமட்டும்   தேக்கிடுவோம்!

பொட்டலினைப் புன்செய்யாய்,   பொன்குவிக்கும்   நன்செய்யாய்,
இட்டமுடன்    நாமுழைத்து,   ஈத்துவக்கக்       காண்போமே!
திட்டமிட்டே    சீர்மிகுநம்,      திரைபடியும்       நெய்தலினை,
மட்டிலாப்     பல்வளத்தால்,    மாணுறவே       நாமுழைப்போம்!

மண்குடைந்து   பல்கனியும்,     மாகடலின்      பல்நிதியும்,
கண்டெடுத்துப்   பாருலகில்,     காரியங்கள்     ஆற்றிடுவோம்!
பண்ணிசையா?  நாட்டியமா?     பண்பாட்டைக்    காத்திடுவோம்!
குண்டுணியாய்த் தேங்காதே,      குன்றிலிட்ட      தீபமாவோம்!
 கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

போட்டிக்கான முதல் கவிதைக்கான இணைப்பு இதோ:

Monday 13 January 2014

பொங்கல் வாழ்த்திற்கு நன்றி மடல்!- கவிஞர் கணக்காயன்




நன்றி மடல்!

பொன்மனத்தீர்!   நட்புளத்தீர்!      பொங்கல்நாள்    வாழ்த்தளித்தீர்!
பன்நலமும்          வாய்த்திடுக!    பார்போற்ற           உயர்ந்திடுவீர்!
இந்தமிழாய்,        வண்குறளாய், இசையோடு         நிலைத்திடுவீர்!
செந்நெல்லும்,    நற்கரும்பும்       செய் உயர்த்தல் போல்;நும்மில்
முன்னோரும்    பின்னோரும்     மூதின்பம்             கொண்டிடுக!
தென்குலப்பெண்  மஞ்சளென,   தேர்ந்தசுவை       இஞ்சியென,
மென்பாட்டாய்,  நற்கவியாய்,    மென்காற்றாய்,   நன்மழையாய்
மன்பதையில்     கேண்மையீர்!    மாண்புறுவீர்!  
நன்றியினைப்   படைக்கின்றேன்! நான்வணங்கி,       ஏற்பீரே!
  
-கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

பொங்கல் வாழ்த்து - கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)


பொங்கல் வாழ்த்து




   உழவர்                பெருநாள்!               தமிழர்                  திருநாள்!
   அழலனை          ஞாயிறுக்               கடிசில்                  படைநாள்!
   உழவினுக்         குதவிய                  பெருவலி             காளையும்
   குழவியாம்        அஃதின்                    சீரடிக்                     கன்றும்
   பழம்,பால்          பொங்கல்               கரும்பொடு         செந்நெல்
   சூழநின்                றேத்துவர்              குழலியர்,              தம்முடை
   குழவியர்            சுற்றமொடு           பழகியோர்            பல்கிட
   அழகாம்               இயற்கை              முருகின்               அருளால்
    வாழிய                 நிலனே!                வளத்தொடு         நீயும்!
    வாழியே              நீவிர்                       குறள்வழி            நின்றே!


                                  -கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

பட உதவி:கூகிளுக்கு நன்றி!





Sunday 5 January 2014

காப்புக்கவிதை-பாபா அருள் வேட்டல்!



மாண்புதுவை    இலாச்பேட்டை   சீநிவாசப்      பேர்நகரில்

விண்ணூர்தி     சேர்முனையச்    சாலைசேர்   அக்‌ஷயமாம்

நண்ணுவார்க்கு   வேண்டுவன     நாட்டமொடு  ஈகின்ற

சீரடியின்         சாயிபாபா       நேரமர்ந்து    கண்புகுந்து

உள்ளத்தே       மன்னுகின்ற     உன்னதத்தால் பேருவப்பே!

தள்ளரிய        தேவனவன்      தந்திடுக       நற்காப்பே!

விள்ளரிய       நல்வியாழன்    சீர்விரதம்      ஏற்றிட்டு

அள்ளிடுவோம்  நேரருளை      அன்னவனின்   வாழ்த்தாலே!

-கவிஞர் கணக்காயன்(இ.சே.இராமன்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!