Saturday 13 September 2014

"புதியதோர் உலகம் செய்வோம்! "-கவிதைப் போட்டிக்கான இரண்டாவது கவிதை!- கவிஞர் கணக்காயன்(இ.சே.இராமன்)


"புதியதோர் உலகம் செய்வோம்!"

நேற்றிருந்த   தின்றில்லா    நேர்த்தியதே    பாருலகு!
மற்றின்று     உள்ளதுவும்   மாறாதோ       நாளைக்கே!
சற்றிதனைச்   சிந்தித்தால்,   சான்றாண்மை  நற்றுணையாய்
முற்றிலுமே   புதியதோர்    முழுதுலகு      காணோமோ?

இல்லாதார்    இல்லாத       இயல்பினதாய்   மாற்றோமோ?
நல்லுளத்தார்  தம்முடமை    நல்குரவைப்     போக்காதோ?
பல்லறிவுச்    சான்றோர்கள்   பாமரர்க்கே     உணர்த்தோமோ?
மெல்லினத்தார் நாற்குணத்தால் மேதினியில்    உயரோமோ?

தன்காலில்       நிற்கின்ற     தன்மைக்கே    நாமாவோம்!
நன்றாற்றல்     ஒன்றினையே  நாட்கடனாய்  கொண்டிடுவோம்!
பன்மொழிகள்    கற்றாலும்     பற்றாவோம்   தாய்மொழிக்கே
எந்நாடு          சென்றாலும்   ஏந்திடுவோம்   நம்பண்பை!

மேலையர்    தோற்றத்தை    மேவிடாதே     நாமெல்லாம்
பாலையைச்   சோலையாய்   பார்த்திடற்கே   நாமுழைப்போம்!
மாலைகாண்   தண்ணிலவில்  மண்டியுள      தண்ணீரை,
வேலைசூழ்     பாருலகில்,    வேணுமட்டும்   தேக்கிடுவோம்!

பொட்டலினைப் புன்செய்யாய்,   பொன்குவிக்கும்   நன்செய்யாய்,
இட்டமுடன்    நாமுழைத்து,   ஈத்துவக்கக்       காண்போமே!
திட்டமிட்டே    சீர்மிகுநம்,      திரைபடியும்       நெய்தலினை,
மட்டிலாப்     பல்வளத்தால்,    மாணுறவே       நாமுழைப்போம்!

மண்குடைந்து   பல்கனியும்,     மாகடலின்      பல்நிதியும்,
கண்டெடுத்துப்   பாருலகில்,     காரியங்கள்     ஆற்றிடுவோம்!
பண்ணிசையா?  நாட்டியமா?     பண்பாட்டைக்    காத்திடுவோம்!
குண்டுணியாய்த் தேங்காதே,      குன்றிலிட்ட      தீபமாவோம்!
 கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

போட்டிக்கான முதல் கவிதைக்கான இணைப்பு இதோ:

4 comments:

  1. அன்புள்ள கணககாயன்

    வண்க்கம். வாழ்த்துக்கள். கவிதை செறிவாக உள்ளது. தொடருங்கள்.

    ReplyDelete
  2. சிறப்பான கவிதை...... பாராட்டுகள் ஐயா.

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. ஐயா வணக்கம் நலம் நலமறிய ஆவல். தங்களுக்கு எனதன்பின் பரிசு ஒன்று பகிர்ந்திருக்கிறேன்.
    http://veesuthendral.blogspot.in/2014/09/blog-post_23.html

    ReplyDelete